கோவை : அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக் கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறைகளின் சிறந்த தரம், துவக்க வகுப்புகளில் ஆங்கில பயிற்சிக்கு அளிக்கும் அதிக முக்கியத்துவம் காரணமாக, தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாறும் ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்வழிக் கற்றல்(ஏ.பி.எல்) மற்றும் படைப்பாற்றல் (ஏ.எல்.எம்) கல்வி முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களை மையமாகக் கொண்டிருப்பதே இக்கல்வி முறைகளின் சிறப்பு. ஆசிரியர்கள் மட்டுமே கற்பிப்பது இங்கு நிகழ்வதில்லை. ஆசிரியர்களின் உதவியுடன் தாங்களாகவே மாணவர்கள் பாடங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. புதிய கல்வி முறைகளின் சிறப்பு காரணமாக ஒவ்வொரு மாணவனுக்கும் தனிக்கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆசிரியர்கள் ஆளாகின்றனர். வண்ணமயமான எழுத்து அட்டைகள், பொம்மலாட்டம், வில்லுப் பாட்டு ஆகியவற்றின் உதவியுடன் சமுதாய விழிப்புணர்வு பாடங்களை கற்றுக் கொள்கின்றனர். விளையாட்டு போல் சிறு சிறு குழுக்களாக பாடங்களை பகிர்ந்து கற்பதால் கற்றல் எளிதாகிறது. இப்புதிய கல்வி முறைகளின் சிறப்புக்கள் பற்றி "சிலைடு ஷோக்கள்' மூலம் அறிய வந்துள்ள மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளில் பலர், ஏ.பி.எல்., கல்வி முறையை தங்கள் பள்ளிகளிலும் அமல்படுத்த அனுமதி கேட்டு வருகின்றனர்.
இப்புதிய கல்வி முறைகளின் சிறப்புக்கள் பற்றி அறிந்த பிற மாநில கல்வியாளர்களும் தமிழக பள்ளிகளை பார்வையிட்டு சென்றவாறு உள்ளனர். சட்டீஸ்கர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. சீன நாட்டு கல்வியாளர்களும் சமீபத்தில் கோவை அரசு பள்ளிகளை பார்வையிட்டு பிரமித்து சென்றனர். இதன் உச்சகட்டமாக, சமீபத்தில் தமிழக பள்ளிகளை பார்வையிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், புதிய கல்வி முறையை புகழ்ந்து தள்ளியதோடு, பிற மாநிலங்களிலும் பின்பற்ற பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய கல்வி முறைகளின் சிறப்புக்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்த பொதுமக்கள், சமீப காலமாக தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கியுள்ளனர்.
கோவை சித்தாபுதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சின்னப்பொண்ணு இது பற்றி கூறுகையில், ""செயல்வழிக் கற்றல் கல்வி முறையால் தமிழக பள்ளிக் கல்வியின் தரம் உயர்ந்து வருகிறது. முன்பு பள்ளிக்கு செல்வதை வெறுத்த குழந்தைகள், இன்று ஆர்வமுடன் தானாகவே கிளம்பி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதிகளில் உள்ள ஒருசில தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் சிலர், இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் 4 மற்றும் 5ம் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக சுமை தூக்கும் தொழிலாளி கூட தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வரும் நிலையில், இப்போது நடுத்தர குடும்பத்து குழந்தைகளும் அரசுப் பள்ளிகளை தேடி வருவது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் புதிய கல்வி முறைகளுக்கு கிடைத்துள்ள வெற்றி,'' என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியத்தை சேர்ந்த பொங்குச்சிபாளையம், ராமநாதபுரம், தொட்டகாலம்புதூர், பெரிய குரும்பபாளையம், சூலூர் ஒன்றியத்தை சேர்ந்த எம்.கணபதிபாளையம், இலச்சிபாளையம், பல்லடம் ஒன்றியத்தை சேர்ந்த கள்ளம்பாளையம்புதூர், காரமடை ஒன்றியத்தை சேர்ந்த சின்னகல்லிபட்டி, நெல்லித்துறை, சுல்தான் பேட்டை எஸ்.அய்யம்பாளையம், வதம்பசேரி ஆகிய பல்வேறு ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு சுமார் 50 தனியார் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் பட்டியல் அளித்துள்ளனர்.
கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை விமலி கூறுகையில், ""சிரமப்பட்டு மூன்றாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் ஏழை பெற்றோரால், நான்காம் வகுப்புக்குப் பின் உயரும் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடிவதில்லை. அதன் பின் பாடங்களும் கடினமாக இருப்பதால் பணம் செலவிட்டு டியூஷனுக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. அரசுப் பள்ளிகளில் இந்த பிரச்னை இல்லை. தனியார் பள்ளிகளைப் போன்ற வீட்டுப்பாடச் சுமை இல்லாமை, இலவச கல்வி, சுதந்திரமான வகுப்பறைச் சூழல், முறையாக ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆகியவை அரசுப் பள்ளிகளின் சிறப்புக்கள். அனைத்துக்கும் மேலாக ஏ.பி.எல்., ஏ.எல்.எம்., கல்வி முறைகளால் கிடைக்கும் தரமான கல்வி அனைவரையும் ஈர்ப்பதே, பெற்றோரின் இந்த மனமாற்றத்துக்கு காரணம்,'' என்றார்.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கோவை மாவட்ட உதவி திட்ட அலுவலர் காளியப்பன் கூறியதாவது:தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வருவது உண்மைதான். நிறைய ஒன்றியங்களில் இருந்து இது குறித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் ரிப்போர்ட் செய்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலம் கற்க, புதிய திட்டங்கள் அறிமுகம் ஆகியுள்ளது முக்கிய காரணம். தங்கள் குழந்தைகள் "மம்மி, டாடீ' என அழைப்பதைக் கேட்க விரும்பும் பெற்றோரில் பலர், ஆர்வமுடன் முதலில் தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். அதிக கல்விக் கட்டணம், அதிக பாடங்கள் ஆகிய சுமைகளுடன் இரண்டாவது குழந்தையும் பிறந்தவுடன் சமாளிக்க முடிவதில்லை. தரமான கல்வியை இலவசமாக கற்றுத் தரும் அரசுப் பள்ளிகளைத் தேடி ஓடி வருகின்றனர். திடீரென அரசுப்பள்ளியில் சேர்ப்பதால் ஏற்படும் சூழல் மாற்றம் காரணமாக, தமிழ் வழிக் கல்வியில் மாணவனால் மனதை செலுத்த முடியாது. படிப்படியாக அடுத்த வகுப்புகளிலும் படிப்பில் பின்தங்கி விடுகிறான். இவ்வாறு அரை குறையாக ஆங்கிலம் கற்று சிரமப்படுவதை விட, முதல் வகுப்பிலேயே அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதுதான் புத்திசாலித்தனம். படிக்கும் பள்ளி முக்கியமல்ல. கல்வித் தரம், மாணவனின் கற்கும் ஆர்வம், பெற்றோர், ஆசிரியரின் வழிகாட்டுதல்தான் சிறந்த கல்வி பெற முக்கியம். வரும் ஆண்டுகளில் தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் அரசுப் பள்ளிகளில் சேருவர் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, காளியப்பன் கூறினார்.
ஆங்கிலத்தில் விளாசும் அரசுப் பள்ளி மாணவர் : அரசுப் பள்ளிகளில் துவக்க வகுப்புகளிலேயே இப்போது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி, "ஹலோ இங்கிலீஷ்' ஆங்கில "டிவிடி'க்கள் மூலம் ஆங்கிலத்தில் பேசும் திறன் வளர்ப்பு, ஆங்கில "ரைம்ஸ்' கற்பித்தல் என தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளை விட இன்று அரசு ஆரம்பப் பள்ளிகள் அதிக தரமுடன் உள்ளன. அரசுப் பள்ளிகளை தேடி தனியார் பள்ளி மாணவர்கள் வருவதற்கு இதுதான் முக்கிய காரணம். ஆங்கில கல்விக்கு வகுப்பறையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் முதல் வகுப்பு மாணவர்கள் கூட, "மே ஐ கமின் டீச்சர்', ஹெள ஆர் யூ, ஐயாம் பைன், வேர் ஆர் யூ கோயிங்' என்றெல்லாம் ஆங்கிலத்தில் அனாயாசமாக பேசுகின்றனர். கிராமக் கல்விக் குழு கூட்டங்களில் முதல் வகுப்பு மாணவர்கள் கூட ஆங்கில நாளிதழ்களை படித்துக் காட்டி பாராட்டு பெறுகின்றனர்

